இந்த மையத்தில் தற்போது 100 படுக்கைகள் போடப்பட்டுள்ளது. இந்த மையத்தில் சித்த வைத்திய மருந்து மாத்திரைகள் மூலிகை மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட சித்த மருத்துவ துறை சார்பில் கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
இந்த மையத்தில் தற்போது 100 படுக்கைகள் போடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மையத்தில் சித்த வைத்திய மருந்து மாத்திரைகள் மூலிகை மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் கடந்த சில தினங்களாக தொற்றின் விகிதம் சற்று குறைந்துள்ளது. பொது மக்கள் கட்டாயமாக வைரஸ் தொற்று தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்ட போதிலும் 11 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் இல்லங்களில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொருத்தவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கோவையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 97.6%. கோவையில் ஞாயிற்றுக்கிழமை பொழுது வெளியில் சுற்றித் தெரிந்தவர்களிடம் இருந்து 5 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அலை சென்னையை விட கோவையில் கூடுதலாக உள்ளது. தொழிற்சாலைப் பகுதிகளில் தொற்று பரவல் காணப்பட்டதால் பொள்ளாச்சி, சூலூர் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. குடியரசு தின விழா பார்வையாளர்கள் இன்றி நடைபெறும். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் இல்லங்களுக்குச் சென்று அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கோவையிலும் அது கடைபிடிக்கப்படும். மேலும், குடியரசு தின விழாவின் பொழுது குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
இதில் மாவட்ட சித்த மருத்துவத் துறை அலுவலர் தனம் ஆகியோர் உடனிருந்தனர்.