குறைந்தபட்சம் 4 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்து பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கோவை: ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கோவை விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது.
கோவையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும், பேருந்து நிலைய பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் பேருந்துகளில் ஏறி முகக்கவசம் அணியாத பயணிகளை முகக்கவசம் அணியவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்விற்குப் பின்னர் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:-
கோவையில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும், கோவையில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பை தற்போது கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரொனா தொற்று தினமும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சமீபகாலமாக பொதுமக்களிடம் முகக் கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருவதாகவும், எனவே முகக் கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மீண்டும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது வெளிநாடுகளில் கொரொனா தொற்று உருமாறி "ஒமைக்ரான்" வைரஸாக புதிதாக பரவ துவங்கி இருப்பதாகவும், நம் நாட்டில் இன்னும் அந்த தொற்று கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி நாட்டில் இருந்து கோவை வருபவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது எனவும், பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் பயணிகள் வெளியே அனுப்பப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக, அதிகாலையில் சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் அனைத்து பயணிகளுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது என தெரிவித்த அவர், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் குறைந்தபட்சம் 4 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்து பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியும் எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.
மேலும், கோவை மாவட்டத்தில் தினமும் 9 ஆயிரம் கொரோனா டெஸ்ட் எடுத்து வருவதாகவும், மாஸ்க் அணிவதன் அவசியத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மாஸ்க் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபாரதம் விதிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒமைக்ரான் வைரஸ் காரணமாக கோவை மாவட்ட எல்லையான வாளையார் பகுதியில் மீண்டும் முகாம் அமைத்து கண்காணிப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம் எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.