கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்..!

ஞாயிற்றுக்கிழமை தோறும் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். மேலும், மாணவியின் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.5 லட்சம் 30 நாட்களுக்குள் கொடுக்க உத்தரவு.



கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி, கடந்த 11 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 11ஆம் வகுப்பு படித்த போது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (31) பாலியல் அத்துமீறலால் தற்கொலை செய்ததாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, ஆசிரியரின் பாலியல் அத்துமீறல் தொடர்பாகப் பள்ளி முதல்வரிடம் மாணவி புகார் அளித்தும் சம்பவத்தை மறைத்து நடவடிக்கை எடுக்காததால் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் (46) மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், பள்ளி முதல்வர் ஜாமீன் கோரி கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை இன்று போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை பள்ளி முதல்வருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக்கூறி இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதையும், நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வழக்கு முதற்கட்ட விசாரணையில் இருப்பதாகவும், ஜாமீன் வழங்கினால் பள்ளி முதல்வர் தலைமறைவாக வாய்ப்புள்ளதாகவும், உயிரிழந்த மாணவி போல் வேறு ஏதேனும் மாணவி அந்தப்பள்ளியில் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என விசாரித்து வருவதால் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசுத்தரப்பில் வாதடப்பட்டது.

இந்த நிலையில், மாணவி உயிரிழந்ததற்கும் முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை என்றும், ஜாமீன் வழங்கவும் முதல்வர் மீரா ஜாக்சன் தரப்பில் வாதாடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு பிறப்பித்தார். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக 30 நாட்களுக்குள் ரூபாய் 5 லட்சம் அரசு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே, 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...