உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டில் கேட்க வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசிக்க இருக்கின்றார்.
திருப்பூர்: உள்ளாட்சி தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் விதமாக திருப்பூரில் நடைபெறும் பா.ஜ.க செயற்குழுவில் பங்கேற்க வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அக்கட்சியினர் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உடன் வந்தார்.
கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அக்கட்சியினர் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் இருந்த படி தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட ஜே.பி.நட்டா கார் மூலம் திருப்பூர் சென்றார்.
திருப்பூரில் பிற்பகல் நடைபெறும் பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் அவர், உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டில் கேட்க வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசிக்க இருக்கின்றார்.
பின்னர் மாலையில் திருப்பூர் வடக்கு பா.ஜ.க புதிய கட்டிடத்தை திறத்து வைக்கின்றார். அங்கிருத்தபடியே ஈரோடு, திருநெல்வேலி, வாணியம்பாடி ஆகிய இடங்களில் புதியதாக கட்டப்பட்ட கட்சி அலுவலகங்களை வீடியோ கான்பிரன்சிங் முறையில் திறந்து வைக்கின்றார்.
அதனை தொடர்ந்து, மாலையில் திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் ஜே.பி.நட்டா பங்கேற்கின்றார். இந்த கூட்டத்தில் பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் விதமாக ஜே.பி.நட்டாவின் பயணம் அமையும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.