கோவை அரசு கலை கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாகப் பேசி வந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை அரசு கலை கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாகப் பேசி வந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள பேராசிரியர் ஒருவர், பாலியல் ரீதியாக மாணவிகளிடம் பேசி வருவதாகக் கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது எனவும் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். போராட்டம் காரணமாகக் கல்லூரி வாசலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.