கோவை மாவட்டத்தில் இதுவரை 88- இடங்களில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 64- ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களிடம் மக்கள் சபை நிகழ்ச்சி வரவேற்பைப் பெற்றுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மசக்காளிபாளையம், உடையம்பாளையம், செளரிபாளையம், இராமநாதபுரம், சாரமேடு, வடகோவை உள்ளிட்ட 12-இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் மனுக்கள் பெறப்பட்டது.
கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் கோவை பொதுமக்களைத் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நேரிடையாக சந்தித்து மனுக்களைப் பெற்று வருகின்றார்.
கடந்த 30 ந்தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள், மனுக்களை நேரிடையாக அமைச்சரிடம் வழங்கி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து இன்று, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மசக்காளிபாளையம், உடையம்பாளையம், செளரிபாளையம், இராமநாதபுரம், சாரமேடு, வடகோவை உள்ளிட்ட 12-இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் மனுக்கள் பெறப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்;
கோவை மாவட்டத்தில் இதுவரை 88 இடங்களில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 64 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது எனவும். பொதுமக்களிடம் மக்கள் சபை நிகழ்ச்சி வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.
கோவையில் பழுதடைந்த சாலைகளைச் சரி செய்யத் திட்ட மதிப்பீடு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் சென்று மோசமான சாலைகள் புதுப்பிக்கப்படும்.
கோவையில் பழுதாகி உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் விளக்குகள் உடனடியாக சரி செய்யப்படும், என்றும் கோவை மாநகராட்சி வளர்ச்சி பணிக்காக 200 கோடி மதிப்பிலான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த மக்கள் சபை நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.