விவசாயிகள் மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடை செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்தனர்.
கோவை: கோவை அடுத்த அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தொழில் பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கோவையை அடுத்த அன்னூர் பகுதியில், தொழிற்பேட்டை அமைக்க 4 வருவாய் கிராமங்கள் மேட்டுப்பாளையம் வட்டத்தில் 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 1504 ஹெக்டேர் நிலத்தை தமிழ்நாடு நில கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை வழங்க, மாவட்ட ஆட்சியர் வாயிலாக, TIDCO வின் முதன்மை இயக்குநர் தமிழக அரசிடம் கோரியிருந்தார்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று அன்னூர் பகுதியில் கிராம மக்கள் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி உள்ளனர்.
அந்த மனுவில், அன்னூர் சுற்றுவட்டார, குக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 50,000 மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. இங்கு நடைபெறும் விவசாய பணிகளை நம்பியே விவசாய கூலி தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், எங்களின் 70 ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினால் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வரும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் விவசாயிகள் நிலம் கையகப்படுத்துதல், என்பதற்கான முயற்சி எங்களை சோர்வடையச் செய்துள்ளது.
விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்ற தீர்மானம் ஐந்து ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முதல்வருக்கு அனுப்பப்பட்டது.
எனவே, விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது, தொழிற்பேட்டை திட்டம் ரத்து என்ற சட்டப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட தாங்கள் ஆவன செய்ய உத்தரவு வழங்க வேண்டி கேட்டுக் கொள்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.