ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் மேட் இன் இந்தியா மற்றும் மேட் இன் தமிழ்நாடு என அச்சிடப்பட்ட ஜவுளி பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை: தீபாவளி பண்டிகையால் புத்துயிர் பெறும் ஜவுளி தொழில்: பெண்கள், குழந்தைகளுக்கான பேஷன் ஆடைகள் ஆண்களுக்கான கேஷுவல் வேர் அதிகம் விற்பனை என, தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி பண்டிகை வியாபாரம் தமிழகத்தில் களைகட்டியுள்ளது. பண்டிகையின் முக்கிய அம்சமான புத்தாடைகள் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் உள்நாட்டு ஜவுளி விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது என தொழில் துறையினர் கூறியுள்ளனர்.
இந்தியன் டெக்ஸ்பெடரேஷன்(ITF), கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது:-

இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஜவுளி பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாகப் பெண்கள் குழந்தைகள் புதிய ஆடைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
தற்போது நோய்த்தொற்று பரவல் கணிசமாகக் குறைந்து உள்ளதை அடுத்து பெண்கள், குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் ஜவுளி பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அப்பிரிவில் பேஷன் ஆடைகள் அதிக அளவு விற்பனை செய்யப்படுகின்றன.
இதேபோல் வீட்டிலிருந்து பணி செய்யும் முறை பெரும்பாலும் மாற்றப்பட்டு மீண்டும் அலுவலகம் சென்று வேலை செய்யும் நடைமுறையை பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கி உள்ளன. இதன் காரணமாகக் கடந்த காலங்களில் டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலை மாறி தற்போது ஆண்களுக்கு அலுவலகத்துக்குச் செல்ல பயன்படும் கேஷுவல் வேர் ஜவுளி பொருட்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில் இந்த பண்டிகை காலம் இந்திய உள்நாட்டு ஜவுளி தொழிலில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் காரணமாக ஜவுளி தொழில் சார்ந்த சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஜீன்ஸ் துணி ரகங்களுக்கு அதிக மவுசு!
தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின்(OSMA) நிர்வாகி, அருள்மொழி கூறியதாவது, "ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சை கொண்டு நூல் தயாரிக்கும் பணி ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், ஜீன்ஸ் துணி ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி பொருட்கள் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் தயாரிக்கப்படும் நூலைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா நோய் தோற்று பரவலுக்குப் பிறகு மேற்குறிப்பிட்ட அனைத்து ஜவுளி பொருட்களின் தேவையும் மார்க்கெட்டில் அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜீன்ஸ் துணி ரகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.
'மேட் இன் இந்தியா', 'மேட் இன் தமிழ்நாடு' ஜவுளி பொருட்கள் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம்!
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் மேட் இன் இந்தியா மற்றும் மேட் இன் தமிழ்நாடு என அச்சிடப்பட்ட ஜவுளி பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான ஜவுளி பொருட்கள் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகின்றன என்ற போதிலும், கடந்த காலங்களைப் போல இல்லாமல் தற்பொழுது பெரும்பாலான ஜவுளி பொருட்களில் மேற்குறிப்பிட்ட வாசகங்கள் அச்சப்படுவது அதிகரித்துள்ளது.