பொள்ளாச்சியை மையமாக கொண்டு தேங்காய் கொள்முதல் மையத்தை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: தென்னை விவசாயத்தை காக்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்னையை பாதிக்கும் வாடல் நோய், கூன் வண்டு தாக்குதல், ஈயிரியோ பைட், வெள்ளை ஈ தாக்குதல், ஒரு நடனம் ஆகிய பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒரு ஆண்டுகளுக்கு முன்பே தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினை காரணம் காட்டி தென்னையைப் பயன்படுத்தி செய்யக்கூடிய தேங்காய் எண்ணெய் தயாரிப்பு, மட்டை கம்பெனி, கயிறு தொழிற்சாலை, நீரா பானம், இளநீர், ஆகிய தொழில் நிறுவனங்கள் முடக்குவதால் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடுவதாக கூறினர்.
இந்த நிலையில், இதனை தவிர்க்க வேண்டும் எனவும், தென்னை விவசாயிகளின் நலனை பாதுகாத்திட தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும் எனவும் பொள்ளாச்சியை மையமாக கொண்டு தேங்காய் கொள்முதல் மையத்தை நிறுவ வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.