முறைகேடாக அமையும் இரும்பாலைக்கு அனுமதி வழங்க கூடாது என இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார கிராம பகுதியில் புதிதாக இரும்பு தொழிற்சாலை அமைக்க 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்கா கொழுமங்குளி, சங்கரண்டாம்பாளையம், வடுகபாளையம், சிறுகிணர், கண்ணாங்கோவில் ஆகிய 5 கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், வடுகபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக இரும்பு தொழிற்சாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.

ஆனால், இரும்பாலை அமைக்க முறைகேடாக அனுமதி வாங்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், தொழிற்சாலை சட்டங்களின்படி முறையாக மக்களிடம் கருத்து கேட்கவில்லை என்றும், இரும்பாலை அமையும் பட்சத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
முறைகேடாக அமையும் இரும்பாலைக்கு அனுமதி வழங்க கூடாது என இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.