காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் சீமான் வன்முறையை தூண்டும் விதத்திலும் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கிலும் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
கோவை: சோனியா, ராகுல் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயூரா ஜெயக்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 50 -க்கும் மேற்பட்டோர் இன்று கோவை காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்தனர்.

பிறகு மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோரை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது,
நாம் தமிழர் கட்சி சீமான் தொடர்ந்து அவர் பேட்டி அளிக்கும் பொழுது, காங்கிரஸ் கட்சியினர் அன்னையாக நினைக்கக்கூடிய சோனியா காந்தியையும், பாரத ரத்னா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர் வன்முறையை தூண்டும் விதத்திலும் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநகர நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.