தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் மீது தனது கணவர் பொய் புகார் அளித்துள்ளதாகவும், தனக்குச் சொந்தமான இடத்தை சட்ட ரீதியாகவே விற்றதாகப் பிரியா அரோரா தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனுக்கு, தனக்குச் சொந்தமான இடத்தை சட்ட ரீதியாகவே விற்றதாகவும் இதில் எந்த விதமான மிரட்டலோ, மோசடியோ நடைபெறவில்லை என்றும் அவர் மீது தனது கணவர், தீபக் அரோரா அளித்துள்ள புகார் பொய்யானது என்று ஜான் பாண்டியன் மீது புகார் அளித்த தொழிலதிபரின் மனைவி பிரியா அரோரா கோவையில் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பிரியா அரோரா, கோவை மணியக்காரம்பாளையத்தில் எனது தந்தையின் பண முதலீட்டில் துருவ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது, இந்த சொத்தை நான் யாருக்கு வேண்டுமானாலும் விற்க முழு உரிமை உள்ளது. இந்த நிலையில், மது போதைக்கு அடிமையான எனது கணவரான தீபக் அரோராவுக்கு சில நடிகைகளுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, என்னை விவாகரத்து செய்ய முடிவு செய்து, தனக்கு தெரியாமல் என்னுடைய கையெழுத்தை போலியாகப் போட்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக, தெரிவித்தார்.
மேலும், தனது நிறுவனத்திற்குப் பிரச்சினை செய்ததோடு மட்டுமல்லாமல் நிறுவனத்தை விற்க நான் மேற்கொண்ட நடவடிக்கைக்கும் கணவர் இடையூறாக இருந்து வந்ததாகக் குறிப்பிட்டார். அதேபோல, தனக்கு ஏற்பட்டிருக்கும் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் தனக்குச் சொந்தமான இடத்தை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனுக்கு விற்க முடிவு செய்து சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில், அதனை அவருக்கு விற்றதாகவும், பிரியா தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜான் பாண்டியன் மீது வேண்டுமென்றே தனது கணவர் தீபக் அரோரா பொய் புகார் அளித்துள்ளதாகவும் இதில் எந்தவிதமான மிரட்டலோ, மோசடியோ நடைபெறவில்லை என்று கூறிய பிரியா அரோரா, கடந்த ஒன்றரை வருடங்களாக கணவன், மனைவி குடும்பப் பிரச்சினையில் சரவணம்பட்டி போலீசார் வேண்டுமென்றே தலையிட்டு ஒரு தலைப்பட்சமாக தன் மீது பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் டிஜிபிக்கு புகார் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.