விடுமுறை அளிக்காத 153 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கோவை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.
கோவை: காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் விதி மீறிய 153 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷ்னர் (அமலாக்கம்) வெங்கடேசன் அறிக்கையில்:
தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியன்று, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா அல்லது பணிபுரிய அனுமதிக்கும் பட்சத்தில் முன் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என்று கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என 204 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்திக்கு தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் முன் அறிவிப்பு அளிக்காத கடைகள், 67 உணவு நிறுவனங்கள், 82 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் 4 கடைகள் என 153 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.