நாதஸ்வர கலைஞர்கள் வாழ்வாதாரம் மேம்பட அரசு மாதந்தோறும் உதவித் தொகை, இலவச இசைக்கருவிகள் வழங்கிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் நாதஸ்வர மற்றும் இசைக் கலைஞர்கள் நலசங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தவில் மற்றும் நாதஸ்வர கருவிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பது வழக்கம்.
இந்நிலையில், இன்று நாதஸ்வர மற்றும் இசைக் கலைஞர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தவில் மற்றும் நாதஸ்வர கருவிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து நலச்சங்கத்தின் தலைவர் ஆண்டவன் கூறுகையில்,
கோவை மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளதாகவும், திருமணம் மற்றும் விழாக் காலங்களில் வாத்தியங்கள் இசைப்பதின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் மூலம் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கோவில்கள் விழா எதுவும் நடத்தப்படாமலும் திருமண நிகழ்ச்சிகள் எளிமையான முறையில் நடத்தப்படுவதால் வாழ்வாதாரம் இழந்து உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாதஸ்வர கலைஞர்கள் வாழ்வாதாரம் மேம்பட அனைத்து நாதஸ்வர கலைஞர்களுக்கும் அரசு மாதந்தோறும் உதவித் தொகை, இலவச இசைக்கருவிகள் வழங்கிட வேண்டும், ஓய்வூதியம், இலவச பஸ்பாஸ் ஆகியன வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், அரசு விழாக்களில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்க வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்றும், அரசு விருதுகளுக்கு இசைக் கலைஞர்களையும் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி இசைக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள், அவர்களை தடுத்து நிறுத்தி நால்வர் மட்டும் சென்று கோரிக்கை மனு அளிக்க அனுமதித்தனர்.