கோவை மாவட்டத்தில் 557 தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில், 2-வது தவணை தடுப்பூசி போடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இம்முகாம், காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று (அக்., 3 ஆம் தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஒரே நாளில் 1.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இன்று கோவை மாவட்டத்தில்நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். இம்முகாம் மூலம் சுமார் 1.50 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி போட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 198 மையங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் 557 தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படும். முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், இந்த மாபெரும் தடுப்பூசி முகாமிற்காக 1,114 அங்கன்வாடி பணியாளர்கள், 557 தடுப்பூசி போடுபவர்கள், 200 மேற்பார்வையாளர்கள் மற்றும் 64 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் 226 முகாம்களும், பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 79 முகாம்களும், வால்பாறை, பொள்ளாச்சி மரம் மேட்டுப்பாளையம் நகாராட்சி பகுதிகளில் மொத்தம் 39 முகாம்களும் மாநகராட்சி பகுதிகளில் 199 முகாம்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர 15 அரசு மருத்துவமனைகளில் முகாம்கள் செயல்படும்.
இம்முகாமிற்காக தன்னார்வலர்கள், தனியார் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இம்முகாமின் போது, தடுப்பூசி போடுபவர்களின் விவரங்கள் உடனடியாக கணிணியில் பதிவேற்றம் செய்யபட்டு, அதற்கான சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம்மாபெரும் தடுப்பூசி முகாமினை பொது மக்கள் பயன்படுத்தி கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.