ஆனைமலைப்பகுதியில் பெண் குழந்தையைக் கடத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இனிமேல் குழந்தைக்கடத்தில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் எச்சரிக்கை.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை முக்கோணம் பேருந்து நிலையம் அருகே கடந்த 28-ம் தேதி இரவு மைசூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சங்கீதா தம்பதியினர் 5 மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்றார்.
இதனையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட எஸ்.பி செல்வரத்தினம் குழந்தைக்கடத்தலை விசாரிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து தனிப்படை போலீசார் குழந்தைக்கடத்தல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை செய்து வந்தனர்.
இதில் கடத்தப்பட்ட குழந்தை ஆனைமலையை அடுத்துள்ள அங்காளக் குறிச்சியில் இருப்பதாக நேற்று இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டனர்.
இதையடுத்து குழந்தையை விலைக்கு வாங்கிய முத்துப்பாண்டி மற்றும் குழந்தையை கடத்திய முருகேசன் ராமர் ஆகிய 3 பேரையும் கைது செய்து ஆனைமலை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து குழந்தைக்கடத்தல் வழக்கில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட தனிப்படை பேலீசாரை இன்று கோவை எஸ்.பி அலுவலகத்தில் டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்.பி செல்வரத்தினம் பாராட்டினார்கள். மேலும் தனிப்படை போலீசாருக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது பேசிய டிஐஜி முத்துசாமி:-
குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விரைந்து செயல்பட்டு 48 மணி நேரத்தில் குழந்தையை கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்து உள்ளதைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார். மேலும் இனிமேல் குழந்தையைக் கடத்துவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.