வால்பாறை அருகே உள்ள முத்துமுடி எஸ்டேட் பகுதியில் கூண்டு வைத்து புலியைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வால்பாறை: வால்பாறையில் கூண்டு வைத்து புலியைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முத்துமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாகப் புலி ஒன்று மக்கள் குடியிருப்பு பகுதி அருகே உலா வந்தது.

அவ்வழியாகச்சென்ற பொதுமக்கள் புகைப்படம் எடுத்துச் சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று நேற்றிரவு கண்காணிப்பு பணிமூலம் அதை உறுதி செய்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, இன்று தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவு படி புலி நடமாடிய அப்பகுதியில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசனின் நேர்பார்வையில் மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் அப்பகுதியில் கூண்டு வைத்து புலியைப் பிடிக்கத் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், புலியைப் பிடிக்கும் வரை அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாடவேண்டாம் என்று வனத்துறையினர் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.