மருத்துவரின் வாக்குமூலம் மற்றும் சிசிடிவி கட்சிகளை ஆதாரமாக வைத்து, சிங்காநல்லூர் காவல்துறையினர் பாஸ்கர் என்பவர் மீது 287/2021 U/S , 294(b).323,324,506(||) என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை: நாடு முழுவதும் அன்றாடம் சாலை விபத்துகளால் நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் ஏற்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான விபத்துகள் நடக்க சாலை விதி மீறல் தான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணியாதது மற்றும் அதிக நபர்களை வாகனத்தில் ஏற்றிச் செல்வது விபத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
அன்றாடம் சாலை விபத்தால் கை, கால் முறிவு, தலையில் காயம், உயிரிழப்பு போன்ற சம்பவங்களைப் பார்க்கும் மருத்துவர் ஒருவர், இரு சக்கர வாகனத்தின் முன் பகுதியில் குழந்தையை அமர வைத்துக் கொண்டு ஒரு கையில் வாகனத்தை ஓட்டிய நபரிடம் ஆபத்தை உணர்த்தியதற்காக அவரை அந்த குடும்பத்தார் சரமாரியாக தாக்கிய சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
கோவை உப்பிலிப்பாளையம், விவேகானந்தர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கணேஷ் சந்திரகலான் என்பவர் செஞ்சேரிமலை மலையடி பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று, வழக்கம் போல பணியை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது, அவருக்கு முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் முன் பகுதியில் இரண்டு வயதுடைய குழந்தையை அமர வைத்துக் கொண்டு, ஒரு கையில் வாகனத்தை ஒட்டி சென்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே அந்த அரசு மருத்துவர், சிறு குழந்தைகளை இப்படி முன்னால் அமர வைத்துக் கொண்டு ஒரு கையில் பைக் ஓட்டுவது விபத்தை ஏற்படுத்தும் என்று அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் அறிவுரையைச் சற்றும் கண்டு கொள்ளாமல் பாஸ்கரன் என்ற அந்த வாகன ஓட்டி, இது என்னுடைய குழந்தை, நீங்கள் யார் எங்களுக்கு அறிவுரை சொல்ல என்று அரசு மருத்துவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், அவர் குடும்பத்தாரும் சேர்ந்து கொண்டு, மருத்துவரை மிகவும் தரைகுறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த மருத்துவரின் கைபேசியை அவர் சட்டையில் இருந்து எடுத்துக்கொண்டு அவரை வீதியில் வைத்து தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காயமடைந்த அந்த மருத்துவர், கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவர் மீதான தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
மருத்துவரின் வாக்குமூலம் மற்றும் சிசிடிவி கட்சிகளை ஆதாரமாக வைத்து, சிங்காநல்லூர் காவல்துறையினர் பாஸ்கர் மற்றும் அவர் குடும்பத்தாரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னர், பாஸ்கர் மீது 287/2021 U/S, 294(b).323,324,506(||) என இந்திய தண்டனை சட்டம் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்யப்பட்டுள்ளார்.