அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் படிந்து உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் டெய்லர் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூபாய் 3.22 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முபாரக் அலி (48), இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கரும்பு கடையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

பின்னர், நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த உடமைகள் சிதறிக்கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ. 3.22 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முபாரக் அலி இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையைத் தொடங்கினர்.
இதனிடையே, தற்சமயம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் படிந்து உள்ளதா? என போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கோவை பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து திருடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.