ராஜ்நகர் நுழைவு வாயிலில் 10-ஆண்டுகளாக எஸ்டிபிஐ கட்சியின் கொடிக்கம்பம் இருந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அதனை அகற்றியதை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: எஸ்டிபிஐ கொடிக்கம்பம் அகற்றப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் சாய்பாபா கோவில் ராஜ்நகர் நுழைவு வாயிலில் 10-ஆண்டுகளாக எஸ்டிபிஐ கட்சியின் கொடிக்கம்பம் இருந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அதனை அகற்றியது. இதனைக் கண்டித்து கோவையில் சாய்பாபா கோவில், உக்கடம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
சாய்பாபா கோவில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வடக்கு தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் காவல்துறையைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.