உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் முக்கிய வீதியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் சிரியன் சர்ச் ரோடு பகுதியில் தொடர்ந்து வீதிகளில் சாலை ஓரங்களில் மருத்துவ கழிவுகள், காலியான ஊசிகள் மருந்துகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன.
அவை நாளடைவில் துர்நாற்றம் வீசத் தொடங்கி அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு விதமான சமூக விரோதச் செயல் நடைபெற்று வருகிறது. இரவு 8 மணிக்கு மேல் இந்த பகுதியில் மறைவில் நின்று மது குடிப்பது, மது பாட்டில்களை சாலையிலேயே போட்டு விட்டுச் செல்வது, முக்கிய வீதி போல் அல்லாமல் இது ஒரு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
இந்த நிலையில், தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் இந்த பகுதியில் தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தினம் தினம் அச்சப்பட்டு இந்த பகுதியில் வசித்து வருவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.