அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க இருப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் கொரோனா எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்த பின்னரே முடிவு அறிவிக்கபடும் என்று தெரிவித்தார். .
கோவை: கோவை மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள் பாதுகாப்பை குறித்தும், தனியார் ஹோட்டலில் அலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கல்வி அமைச்சர் கூறியதாவது;
ஆலோசனை கூட்டத்தில் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அவரவர் கருத்துக்களை மற்றும் பள்ளிகள் நடத்துவதில் உள்ள சிரமங்களை பற்றி நிர்வாகிகள் பதிவிட்டனர். இதில் கொரோனா காலகட்டத்தில் அவர்கள் சந்தித்த பொருளாதார பிரச்சனைகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் வேலை இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு அரசு உதவி செய்தல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கல்வி துறையுடன் ஒன்று சேர்ந்து நகர்ந்தால் மட்டுமே அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றவர், உயர் ஆதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் பார்வைக்கு நிச்சயம் கொண்டு சென்று சரி செய்ய வேண்டிய விசயங்களை சரி செய்வோம் என்றார்.
அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க இருப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறிய அவர், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கொரோனா ஆலோசனை கூட்டத்தில் கொரோனா எண்ணிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பின்னரே முடிவு அறிவிக்கபடும் என்று தெரிவித்தார்.
அதேபோல, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பு உயர்த்தப்பட்ட பரிசீலனை செய்யப்படும் என்றார்.
மேலும், கோவையில் தனியார் பள்ளிகள் 1ம் வகுப்பு முதல் திறக்க வேண்டும் என்றும் மாணவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இருப்பினும், பெற்றோர்களிடையே பயம் இருக்க தான் செய்கிறது என்றவர், பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அதனை வெளியில் தெரிவிக்காமல் இருப்பது தவறுதான் எனவும் உடனடியாக் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.