உக்கடம் மீன் மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு அதிகப்படியான மக்கள் கூட்டம் வருவதைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோயம்புத்தூரில் உள்ள உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் கடைகள், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், செட்டிபாளையத்தில் அமைக்கப்படும் தார்சாலை பணி, சீராபாளையம் நியாயவிலைக் கடை என பல இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கொரோனாவினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதால், கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி பாதிப்பு 200 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் நோய்த்தொற்று பரவும் வீதம் 2 சதவீதமாக உள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தில் இதுவரை 83 சதவீதத்திற்கு மேல் மக்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், வருகின்ற 20 ஆம் தேதி முதல் அனைத்து வணிக வளாகங்கள், துணிக்ககைள், நகைக்கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதோடு வாடிக்கையாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதை உரிமையாளர்கள் உறுதி செய்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உக்கடம் மீன் மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், இங்குள்ள 72 கடைகளில் 30 கடைகள் கூட்ட நெரிசல் இல்லாமல் இயங்கி வருகின்றன. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறக்கப்படாததால் சனிக்கிழமைகளில் கடைகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கடைக்காரர்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மதுக்கரை, செட்டிபாளையத்தில் பாலாஜி நகர் முதல் மலுமிச்சம்பட்டி வரை ரூ.45.85 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் ஜல்லி, மணல் மற்றும் கலவைகள் முறையாக உபயோகப்பட்டிருப்பதைச் சாலையினை துளையிட்டு பரிசோதனை மேற்கொண்டார். இதையடுத்து, சீராபாளையம் கோவை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, உதவி ஆட்சியர் சரண்யா( பயிற்சி) உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.