பிரதமர் மோடி பிற்படுத்த வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கின்ற நிலையில் பெரியார் உயிரோடு இருந்தால் இதை நிச்சயம் கொண்டாடி இருப்பார் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு 12,000 ஆயிரம் பெண்களுக்கு "இதம்" திட்டத்தின் கீழ் மாதம்தோறும் இலவச நாப்கின் வழங்கும் நிகழ்ச்சியினை அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ இன்று துவங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அளித்த பேட்டியில் கூறியதாவது;
பிரதமர் மோடி பிறந்தநாளை இன்று முதல் அக்டோபர் 7 ம் தேதி வரை சேவை மற்றும் சமர்ப்பண தினமாக கொண்டாடி வருகின்றோம் எனவும் பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி மாதம்தோறும் 10 ஆயிரம் பெண்களுக்கு வீடு தேடிச் சென்று நாப்கின் வழங்கும் திட்டத்தை இன்று துவங்கி இருக்கின்றோம் எனவும், மீதமுள்ள 2000 நாப்கின் தனது அலுவலகத்தில் இருக்கும் எனவும் பெண்கள் தங்களது வயதுக்கான ஆதாரத்திற்கு ஆதார் அட்டையை காட்டி, முகவரியை கொடுத்துவிட்டு அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெண்கள் நாப்கின் வாங்கி செல்லாம் என்றார்.
தமிழக அரசு இன்று சமூக நீதி நாள் என்று அறிவித்து செயல்படுத்தி இருப்பதை வரவேற்பதாக தெரிவித்த அவர், மோடி பிற்படுத்த வகுப்பை சேர்ந்தவராக இருக்கின்ற நிலையில் பெரியார் உயிரோடு இருந்தால் இதை நிச்சயம் கொண்டாடி இருப்பார் என்று தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர், பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து இருப்பதுடன், மாநிலங்களே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்கலாம் என்ற அனுமதி வழங்கியவர் மோடி என கூறிய அவர், மோடியின் பிறந்த தினம் நாட்டிற்கே சமூக நீதி தினம் என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடக்கின்றது என கூறிய அவர், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி இல்லத்தில் ஆதாரம், நீதிமன்ற உத்திரவுகள்படி சோதனை நடத்தியிருந்தால் அது வேறு எனவும், ஆனால், பழி வாங்கும் நடவடிக்கையாக சோதனைகள் இருக்கக் கூடாது என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்றார்.
பா.ம.க அவர்கள் கட்சி நலனுக்காக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர் என கூறிய அவர், தே.ஜ.கூட்டணியில் இருந்து விலகி இருக்கின்றார்களா, இல்லை இந்த தேர்தலுக்கு மட்டும் கூட்டணியில் இருந்து விலகி இருக்கின்றார்களா என்ற எந்த விளக்கமும் இல்லை எனவும் எனவே பா.ம.க தலைமை இதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க துவங்கி விட்டோம் என கூறிய அவர், தே.ஜ.கூட்டணி வலுவாக இருக்கின்றது என்றார்.
நீட் தற்கொலைகளுக்கு திமுகதான் காரணம் என கூறிய அவர், நீட்டை அரசியலாக்கி திமுக தற்கொலைகளை தூண்டி வருகின்றது எனவும், நீட்டை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராகிவிட்ட நிலையில், மாணவர்களை குழப்பும் வேலையை திமுக கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேர்வு பயத்தால் உயிரிழக்கும் அனைத்து மாணவர்களுக்கு 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்பதுதான் சரியானது எனவும் நீட்டில் இறந்தவர்களுக்கு மட்டும் இழப்பீடு கொடுப்பது என்பது சரியானது அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் யாரெல்லாம் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கூட்டணி முடிவான பின்புதான் உறுதி செய்யப்படும் என கூறிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கின்றது, அதில் எந்த மாற்றமும் இல்லை என பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.