நீண்ட நாட்களுக்கு பின் கோவையில் தங்க நகை வியாபாரம் திருப்திகரமாக இருப்பதாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், முத்து வெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.
கோவை: தொடர் முகூர்த்த நாட்களால், எங்கு பார்த்தாலும் திருமணங்கள் மற்றும் இதர விசேஷங்கள் நடைபெற்று வந்தது. கொரோனா தளர்வுகள் மற்றும் மூன்றாம் அலை அச்சம் காரணமாக திருமணங்கள் போன்ற விசேஷங்களை நடத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால், ஜவுளி மற்றும் நகைகடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் கோவையில் தங்க நகை வியாபாரம் திருப்திகரமாக இருப்பதாக நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், முத்து வெங்கட்ராம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் சராசரியாக தினமும் 200 கிலோ, அதாவது 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை வணிகம் நடைபெறும். ஆனால், நோய்த்தொற்று பரவலுக்கு பின் தங்க நகை வணிகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்ட நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால், தினமும் 10% 20% வியாபாரம் மட்டுமே நடைபெற்று வந்தது. தற்போது, ஆவணி மாதம் துவக்கத்திலிருந்து திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு சுபமுகூர்த்த விசேஷங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தங்க நகை வியாபாரமும் திருப்திகரமான வகையில் உள்ளது.
கோவையில் வார இறுதி நாட்களில், நகை கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வார நாட்களில் தினமும் சராசரியாக 60 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை வணிகம் நடைபெற்று வருகிறது.இதனால், பல நாட்கள் நெருக்கடியில் சிக்கித் தவித்த நகை தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட நகை தொழில் சார்ந்த அனைத்து தொழில் துறையினருக்கும்சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் விலை நிலவரம்:
செப்டம்பர் 6: Rs 36,752
செப்டம்பர் 7: Rs 36,640
செப்டம்பர் 8 : Rs 36,416
செப்டம்பர் 9 : Rs 36,392
செப்டம்பர் 10: Rs 36,400
(செப்டம்பர் 11,12: சனி மற்றும் ஞாயிறு மார்க்கெட் விடுமுறை)