கோவை: கோவை அன்னூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சம்பவம் தொடர்பான ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளை இன்று 7 பேர் கொண்ட குழு வெளியிட்டனர்.
கோவை: கோவை அன்னூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சம்பவம் தொடர்பான ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளை இன்று 7 பேர் கொண்ட குழு வெளியிட்டனர்.
கோவை அன்னூர் வட்டம் ஒட்டர் பாளையத்தில் கடந்த மாதம் 6ம் தேதி கிராம அலுவலகத்தில் கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த காணொலியும், விவசாயி கோபால்சாமி என்பவரை கிராம உதவியாளர் தாக்கிய மற்றொரு காணொலியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விவசாயி கோபால்சாமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆதி தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திராவிட பண்பாட்டுக் கூட்டு இயக்கம் சார்பில் இந்த சம்பவம் தொடர்பாக உண்மையை கண்டறியும் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

அவர்கள் கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் இன்று ஆய்வு அறிக்கை, பரிந்துரைகளை வெளியிட்டனர்.
அவர்களின் பரிந்துரைகள்;
ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் மீது நடத்தப்பட்ட சம்பவங்களின் உண்மைத் தன்மையை அரிய சிபிசிஐடி எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் காணொலியாக பதிவு செய்யப்பட்ட தொகுப்பை காவல்துறை கைப்பற்றி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அதேபோல, விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வீடியோ தொகுப்பை தனித்தனியாக வெளியிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டியல் சமூக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றனர்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உரிய தடுப்பு நடவடிக்கைகள், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.