கோவை: கோவை வந்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு மற்றும் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயல்பாக இயங்கி வளர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடிசியா சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவை வந்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயல்பாக இயங்கி வளர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடிசியா சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக கொடிசியா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிறப்பு முகாம்கள் மூலமாக தகுதி உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை போடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
1994ல் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் திருத்தி அமைக்கப்பட வேண்டும். தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு புதிய மாஸ்டர் பிளான் வெளியீடு விரைவுபடுத்தப்பட வேண்டும்.
நகர ஊரமைப்பு இயக்குநர், உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் வீட்டு வளர்ச்சி துறை ஆகியோரிடம் கட்டிடங்களுக்கான முறையான அனுமதி பெறுவதை விரைவுபடுத்தும் வகையில் தகுந்த மென்பொருளுடன் ஒற்றைச்சாளர அனுமதி முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தொழிற்சாலை கட்டுமானங்களுக்கு தேவையான தொழிற்சாலை நில் வகைப்பாடு குறித்த விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிகள் பெறுவது தாமதமாகாமல் விரைவுபடுத்த முடியும்.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ள அரசு துறை நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய நிலுவை தொகையை உடனடியாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சொத்துவரி, தொழில்வரி, உரிமத்தொகை, மாசுகட்டுபாடூ வாரிய கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலுத்தவேண்டிய தொகைகளும் மேலும் 6 மாதங்களுக்கு 31.03.2022 வரை எவ்விதமான வட்டி மற்றும் நடவடிக்கைகளில் இன்றி தள்ளி வைக்கப்பட வேண்டும்.
அந்தந்த தொழிற்சாலை வளாகங்களில் புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களின் தங்குமிடம் வசதியை உருவாக்கிட மானியங்களை அனுமதிக்க வேண்டும்.
அரசு துறைகளில் கெடுபிடி தவிர்க்கப்பட்டு ஒவ்வொரு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தன் உறுதி சான்றிதழ்கள் மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
தேவையான திறன்களுடன் கூடிய போதுமான மனிதவளத்தை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றிட உதவும் வகையில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஊரக மேம்பாட்டு துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை உருவாக்கும் அமைப்பு இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு ஊரக பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். மாநில அரசு திறன் மேம்பாட்டுக்கான 90% நிதி வழங்க வேண்டும். ஊரக பகுதி தொழிலாளர்களுக்கு பயிற்சி காலத்திற்கான உதவி தொகை மற்றும் தங்குமிடம் வழங்கப்பட வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் பணி புரிவோரை தொழிற்சாலைகளில் பணி அமர்த்துவதன் மூலம் தொழிற்சாலைகளில் தொழிலாளர் தேவை ஓரளவு நிறைவு செய்யப்படும்.
மாணவர்களுடைய எதிர்காலத்திற்கு பயன்பெறும் வகையில் நேரடி தொழிலக பயிற்சி நுட்பங்கள் கல்லூரி பாடத் திட்டத்தில் இடம் பெறவேண்டும். கல்லூரி முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இதுபோன்ற தொழில் சார்ந்த நேரடி அறிமுகங்களை பாடத் திட்டத்திலே பெறுவதால் எதிர்காலத்தில் அவர்கள் தொழில்முனைவோராக மாறும் வாய்ப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் பணியாளர்கள் எனும் மனிதவளத்தை வலுப்படுத்துதல்
நமது மாநிலத்தில் தற்போது உள்ள தகுதியான பணியாளர்களை திறன் மிக்கவர்களாக மாற்றுவதற்கான ஒரு சிறப்பு திட்டம் வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் அரசுடன் ஒத்துழைக்க எப்பொழுதும் தயாராக உள்ளோம்.
மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலம்
கணிப்பொறி மற்றும் அது தொடர்புடைய சர்வர், பிரிண்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் கோவையில் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழகம் தற்போது ஒரு மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி செய்யும் முன்னணி மாநிலங்களில் ஒன்று. எனவே இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் மூலமாக அதிக எண்ணிக்கையிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு அன்னிய செலாவணியையும் ஈட்ட இயலும்.
இராணுவ தளவாட உற்பத்தி பொருட்களுக்கான சோதனை மற்றும் உள்கட்டமைப்பு திட்டம்
மேற்சொன்ன திட்டத்தின்கீழ் இராணுவ தளவாட உற்பத்தி துறை தமிழகத்தின் 400 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு இராணுவ தளவாட சோதனை மையத்தை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த மையம் அமைவதற்கு கோயம்புத்தூர் ஏற்ற இடமாகும்.
இந்திய முப்படைகளுக்கு தேவையான உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் வகையில் அமையும் இந்த மையத்தின் திட்டச் செலவான 4000 கோடி ரூபாயில் மத்திய அரசாங்கம் 75% மேற்சொன்ன திட்டத்தின்கீழ் வழங்குவதால் மீதி உள்ள 25% நிதி உதவியை வழங்குமாறு மாநில அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பெரும் நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய ஸ்டார்ட் அப்கள் இந்த சோதனை மைய வசதியை பயன்படுத்திக்கொண்டு தங்கள் உற்பத்தி பொருட்களை இராணுவத்திற்கு வழங்குவதற்கான சான்றிதழைப் பெறமுடியும்.
இந்தியாவில் இராணுவ தளவாட தொழில்வழி தடங்களில் ஒன்றாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இது சார்ந்த பெரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மையங்களை கோவையில் அமைக்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆற்றல்
குறைந்த அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச கட்டணத்தையும் உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எம்.டி. கட்டணத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள 15% தீர்வை குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். அதில் வருமானம் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினா் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
காற்றாலை உற்பத்தி மற்றும் சூரியஒளி உற்பத்திக்கான நிலுவையில் உள்ள தொகையை விரைந்து வழங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
24*7 ஆற்றல் தேவையை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தயாராக இருக்க வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கம்
இந்தியாவில் முதல் இருபது விமான நிலையங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் விமான நிலையம் இயங்கி வருகிறது. கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு 6500 ஏக்கர் நீலம் தேவைப்படுகிறது. தேவையான நிலத்தை கையகப்படுத்தி விரிவாக்க பணியை விரைந்து செய்து தர வேண்டுகிறோம்.
இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர்லங்கா, ஏர் அரேபியா அண்டு எமரேட்ஸ் போன்ற நிறுவனங்கள் இங்கிருந்த சர்வதேச விமான சேவை அளிக்க தயாராக உள்ளன. அதற்கு கோவை விமான நிலைய ஓடுபாதை அதற்கேற்ப அகலப்படுத்தப்பட வேண்டும்.
பணியாளர் குடியிருப்பு நகரங்கள்
ஒரு தொழில் நகரம் என்ற முறையில் கோவையில் ஏராளமான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நகரத்தில் அவர்களுக்கு தங்குமிடம் வழங்குவது என்பது பெரும் சிரமமாக உள்ளது. இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் தங்குமிட தேவையை எதிர்கொள்ளும் வகையில் அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பணியாளர் குடியிருப்பு நகரங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கோயம்புத்தூர் வளர்ச்சி குழும உருவாக்கம்
கோயம்புத்தூர் நகரம் அனைத்து வகையிலும் விரைந்து வளர்ச்சி அடைய சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தைப் போலவே கோவையிலும் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
பவுண்டரி தொழில்
பவுண்டரி மணலை மறுசுழற்சி செய்து சாலை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அந்த மணலை கொண்டு தரையில் பதிக்க கூடிய ஓடுகளை உருவாக்குவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு தமிழக அரசின் ஆதரவை எதிர்நோக்குகின்றோம்.
பவுண்டரியில் இருந்து வெளியேற்றப்படும் மறுபயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிலை வரும் வரை அவற்றை சரியான முறையில் அகற்றுவதற்கான வழிவகைகள் வேண்டும். ஆபத்தற்ற இந்த மணலை கொண்டு கைவிடப்பட்ட கிணறு மற்றும் கல்குவாரிகளை நிரப்ப இயலும். இந்த முறை வெகு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதோடு சூழலுக்கும், துறை சார்ந்த அறிவுரைகள் வேண்டப்படுகிறது.
பவுண்டரி, பொறியியல் உற்பத்தி போன்ற துறைகளில் உள்ள தொழில்முனைவோர் தொழிற்சாலைகளை சுற்றி உள்ள பகுதிகளை, தொழிற்சாலை நடத்த அனுமதி பெற்ற சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை அதன் பிறகு பச்சை என்று குறிப்பிட்ட வகைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இதன் மூலம் தேவையற்ற நிர்வாக சிக்கல்களை தவிர்க்க இயலும்.
நமது மாநிலத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் அடிப்படை தொழில்கள் ஒன்றாக பவுண்டரி தொழில் கருதப்படுகிறது. கோவையில் உள்ள பவுண்டரிகளில் அளவு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப தரம் வாய்ந்த ஒரு தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் பணியாளர் பயிற்சி மையத்தை உருவாக்க வேண்டும்.
உட்கட்டமைப்பு
கோவையில் 1000 முதல் 1500 ஏக்கர் வரை பரப்புள்ள ஒரு மாபெரும் தொழிற்பேட்டை வளாகம் சிட்கோவால் உருவாக்கப்பட வேண்டும்.
கோயம்புத்தூர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மையமாக இருப்பதால், கோவையைச் சுற்றி உள்ள 100 கி.மீ பரப்பளவில் பெரும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
கோயம்புத்தூர் - மதுரை, கோயம்புத்தூர் - ஓர் தொழில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
சிறு தொழிற்சாலைகளின் நலன் கருதி, தமிழகத்தில் மாடி மற்றும் பல அடக்கு தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும்
கோயம்புத்தூர் - ஓர் தொழில் வழிதடத்தை மேம்படுத்துவதன் மூலம் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 ஆண்டுகளில் இருமடங்காகும்.
தமிழ்நாட்டில் இராணுவ தொழில் வழித் தடத்தை மேம்படுத்துவதன் மூலம் சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஓர் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு மேம்பட முடியும்.
இன்றைய சூழலில் கோயம்புத்தூருக்கு புறநகர் ரயில் சேவை அளிக்கும் மெட்ரோ ரயில்கள் தேவைப்படுகின்றன.
தற்போது நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள், சரக்கு முனையங்களை நவீனப்படுத்துதல், ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை விரைவுபடுத்த வேண்டும்.
மேற்கு பைபாஸ் சாலையை உருவாக்க வேண்டும்.
கொச்சின் எல்லை சாலை - பல்லடம் முதல் மதுக்கரை வரை உள்ள சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக்கப்பட வேண்டும்.
பல்லடம் முதல் சிந்தாமணிபுதூர் வரையிலான சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலை ஆக்கப்பட வேண்டும்.
சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரையில் உயாமட்ட சாலை அமைக்கப்பட வேண்டும். கர்நாடக மாநிலம் சென்றுவரும் போக்குவரத்து எளிமையாக நடைபெற சத்தியமங்கலம் சாலை அகலப்படுத்தப்பட்டு சரவணம்பட்டியில் இருந்து பண்ணாரி வரை நான்கு வழிச்சாலையாக்கப்பட வேண்டும்.
நகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பேருந்து முனையம் அமைய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
எல் அண்ட் டி பைபாஸ் சாலை, நீலம்பூர் முதல் மதுக்கரை வரை 6 வழிச் சாலையாக மாற்றப்பட வேண்டும்.
மேற்சொன்ன கோரிக்கைகளை அமைச்சர் பெருமக்கள் கனிவுடன் பரிசீலித்து ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலும் இப்பகுதியில் தொழில்முனைவோர் மற்றும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் தங்களுடைய நல் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.