கோவை: திருச்சி ரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான 40 சென்ட் ரிசர்வ் சைட்(பூங்கா) 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து, திருமண மண்டபத்தின் டைனிங் ஹால் கட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை: திருச்சி ரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான 40 சென்ட் ரிசர்வ் சைட்(பூங்கா) 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து, திருமண மண்டபத்தின் டைனிங் ஹால் கட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிங்காநல்லூர் அருகே கோவை - திருச்சி ரோட்டில், சென்ட்ரல் ஸ்டூடியோ பின்புறம் திருநகர் லே- அவுட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான ரிசர்வ் சைட்(பூங்கா) கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாண்டுகளுக்கு முன் மாநகராட்சி நிர்வாகத்துக்குச் சாதகமாக கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று வரை அந்த இடம் மீட்கப்படாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறியதாவது:-
" கோவை - திருச்சி ரோட்டில், ராஜலட்சுமி மில்ஸ் பஸ் ஸ்டாப் அருகே சென்ட்ரல் ஸ்டூடியோ பின்புறம் திருநகர் லே-அவுட்டில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 40 சென்ட் ரிசர்வ் சைட்(பூங்கா) உள்ளது.
8 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அருகில் உள்ள திருமண மண்டபத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிடைத்த புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில் அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உண்மை என தெரிய வந்துள்ளது.
ரிசர்வ் சைட் பகுதியில் திருமண மண்டபத்தின் டைனிங் ஹால் கட்டப்பட்டுப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாகக் கடந்த 2017-ல் கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 2018ல் தீர்ப்பு மாநகராட்சி நிர்வாகத்துக்குச் சாதகமாக வழங்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும், இன்று வரை அந்த இடம் மீட்கப்படாமல் உள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை பகிரங்கமாக ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாகக் கணிசமான வருவாயைத் திருமண மண்டப நிர்வாகத்தினர் ஈட்டி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 63 வது வார்டு பகுதியில் இந்த ஆக்கிரமிப்பு காணப்படுகிறது. கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட் விபரங்கள் பட்டியலில், பூங்கா என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த பகுதி இன்று வரை ஓபன் ஸ்பேஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்காநல்லூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் பிடியிலிருந்து விரைவில் மீட்டெடுத்து அந்த பகுதியில் பூங்கா அமைத்துத் தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். மாநகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்."
இவ்வாறு சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறினார்.