கோவை: கோவை உப்பிலிபாளையம் ராஜிவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கேசவ்குமார் என்ற மானாமதுரையைச் சேர்ந்த மாணவர், கல்லூரி மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
கோவை: கோவை உப்பிலிபாளையம் ராஜிவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கேசவ்குமார் என்ற மானாமதுரையைச் சேர்ந்த மாணவர், கல்லூரி மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
கோவை உப்பிலிபாளையம் ராஜிவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி லாவண்யா என்பவர் கடந்த 13ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், மாணவியின் வீட்டின் அருகில் தங்கி படித்து வந்த கேசவ்குமார் என்ற மானாமதுரையைச் சேர்ந்த மாணவர், கல்லூரி மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
மேலும், மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டியதால், அச்சமடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் காவல் துறையினர் மானாமதுரையில் வீட்டில் இருந்த கேசவ குமாரையும் அவரது தாயார் மங்கையர்க்கரசியையும் கைது செய்தனர். பணம் பறிக்கும் கேசவகுமாரின் நடவடிக்கைகள் தெரிந்தும், அவருக்கு உடந்தையாக இருந்ததால், மங்கையர்க்கரசியையும் சிங்காநல்லூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட கேசவகுமாரின் செல்போனில் இருந்த வீடியோக்களை பார்த்த சிங்காநல்லூர் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில், அறை எடுத்து தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கி அவர்களிடம் பணம் பறிப்பதும், ஜூனியர் மாணவர்களை ரோட்டில் அடிப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், கையில் கத்தியுடன் வீடியோக்கள் பல எடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. தற்போது இந்தக் காட்சிகள் வெளிவந்துள்ளது.
இந்தக் காட்சிகள் தொடர்பாகவும் சிங்காநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜூனியர் மாணவர்களை அவர்களின் அறைக்கு சென்று மிரட்டி தாக்குவதும், அவர்களிடம் ஜூனியர் மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதையும் வாடிக்கையாக வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேசவ்குமாரால் வேறு கல்லூரி மாணவிகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், அது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள காவல் துறையினர் திட்டமிட்டு இருக்கின்றனர். மானாமதுரையைச் சேர்ந்த கேசவ்குமார் கல்லூரியில் மோசமாக நடந்து கொண்டதன் காரணமாக நவ இந்தியா அருகே உள்ள தனியார் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். இருந்தாலும், கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதும், இந்த செயல்களுக்கு அவரது தாயாரும் உடந்தையாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது அம்மாவும், மகனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிங்காநல்லூர் போலீஸார் இதுகுறித்து, மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.