கோவை: தமிழகத்திலேயே மிகவும் குறைவான விலையில் கோவை மக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என டி.கே. மார்க்கெட் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
கோவை: தமிழகத்திலேயே மிகவும் குறைவான விலையில் கோவை மக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என டி.கே. மார்க்கெட் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
கோவை பெரியகடை வீதி பகுதியில் டி.கே. மார்க்கெட் என சொல்லக்கூடிய தியாகி குமரன் மார்க்கெட் கடந்த 1930ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் 450 கடைகள் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் இந்த மார்க்கெட்டிற்கு பெரிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பல வகையான காய்கறிகள் வருகின்றன.
இந்தநிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கோவை மாநகர மக்களுக்கு காய்கறிகள் கிடைக்க மொத்த மார்க்கெட்டுகளில் இருந்து நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தியாகி குமரன் மார்க்கெட்டில் இருந்து மாநகரில் உள்ள 30 வார்டுகளுக்கும் மேல் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டி.கே. மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘தமிழக மக்களின் நலன் கருதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தாலே கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம். கோவை மாநகர மக்களுக்கு காய்கறிகள் அவரவர் வீடுகளுக்கே நடமாடும் வாகனங்கள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். இதற்காக மாநகராட்சி கமிஷனர் சிறப்பாக செயல்பட்டு அதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளார்.
தியாகி குமரன் மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்கிறோம். சேவை மனப்பான்மை கொண்டு இதை செய்கிறோம். தமிழகத்திலேயே மிகவும் குறைந்த விலையில் அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட குறைவான விலையில் காய்கறிகளை வழங்குவோம். தினமும் நடமாடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதனால் தங்குதடையின்றி காய்கறிகள் கிடைக்கும்'' என்றார்.