கோவை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிங்காநல்லூர் வேட்பாளர் மட்டும் கட்சியின் துணை தலைவர், டாக்டர்.ஆர்.மகேந்திரனை ஆதரித்து சிங்காநல்லூர் தொகுதி முழுவதும், இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிங்காநல்லூர் வேட்பாளர் மட்டும் கட்சியின் துணை தலைவர், டாக்டர்.ஆர்.மகேந்திரனை ஆதரித்து சிங்காநல்லூர் தொகுதி முழுவதும், இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சௌரிபாளையம், உப்பிலிபாளையம், நீலிகோணம்பாளையம், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானம், ஆகிய பகுதிகளில் கமல் மற்றும் மகேந்திரன் என இருவரும் கூட்டாக, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, உப்பிளிபாளையம், சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானம் ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். "இந்தக் குழந்தைகள் வளர்ந்து வரும் போது இப்பகுதியில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் வாழ்வு மிக மகிழ்ச்சியோடு அமைய வேண்டும். அதை அமைப்பது எங்கள் கடமை", என்று கூறினார்.
தொடர்ந்து, பெரும் திரளாக கூடியிருந்த வாக்காளர்கள் மத்தியில் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர், கமல்ஹாசன், தொகுதியின் அனைத்து பிரச்சனைகளையும் பட்டியலிட்டு இருக்கிறோம். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதி பிரச்சனைகளை பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். நாங்கள் வெற்றி பெற்றால் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்வோம்", என்று வாக்குறுதி அளித்தார்.
அரசியல் சாக்கடை அல்ல..!
சீரழிந்த நிலையில் இருக்கும் தமிழகத்தை சீரமைக்கவே நாங்கள் ஆட்சியைப் பிடித்து அதன்மூலம் மக்களுக்கு சேவை செய்யவுள்ளோம். அரசியல் சாக்கடை அல்ல. அரசியல் சாக்கடை என்கிறார்கள் ஆனால் அரசியல் எப்படி சாக்கடையாக இருக்க முடியும் நான் பார்த்து வளர்ந்த தலைவர்கள் அனைவரும் அரசியலிலே இருந்தவர்கள், என்றார்.
தமிழகத்தை சீரமைகக் வந்த துப்புரவு தொழிலாளிகள் நாங்கள், மக்களின் கருவிகளாய் செயல்படுவோம். இலவசம் என்ற பெயரில் மக்களின் வரிப் பணத்திலேயே, மக்களுக்கு பொருட்களை வழங்குகிறார்கள், இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இதை சாதிப்பது தான் எங்கள் நோக்கம்.
வளர்ச்சிப் பாதை
சீனா என்ற நாடு 35 ஆண்டுகளுக்கு முன்பாக மிக மோசமான நிலையில் தான் இருந்தது, ஆனால் அந்த மக்கள் அந்த நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றனர். அதேபோல், நாம் நினைத்தால் தமிழகத்தையும் வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லலாம்.
மக்களை நம்புகிறோம்

ஊழலில் மூழ்கிப்போன கட்சிகள் மக்களை ஏழ்மையில் வைத்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் மேலும் ஊழலின் மூலம் பயன்பெற முடியும். அதை தகர்த்தெறிவதுதான் எங்களின் மிக முக்கியமான பணி. நாங்கள் மக்களை நம்பி மட்டுமே திட்டங்களைத் தீட்டுகிறோம். மக்கள் எங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
மக்கள் சேவைக்காகவே ஹெலிகாப்டரில் செல்கிறேன்

நான் ஹெலிகாப்டரில் செல்வதை கேலி செய்கிறார்கள். ஆனால், நான் மக்கள் சேவைக்காகவே ஹெலிகாப்டரில் செல்கிறேன். பேரிடர் காலங்களின் போது மக்களின் அருகில் இருந்து பார்க்க வேண்டிய முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று தான் மக்களை பார்த்தார். நான் அவ்வாறு இல்லை.
இதுவரை சினிமாவில் நட்சத்திரமாக இருந்தேன். இனி ஒவ்வொரு வீட்டிலும் சிறு விளக்காக இருக்க ஆசைப்படுகிறேன். அதற்கான, வாய்ப்பு அளியுங்கள். என் வாழ்வின் மொத்த அனுபவமும் மக்கள் நலனுக்காகவே, மக்கள்தான் எனது பலமான கூட்டணி.
கொங்கு மண்டலம் ஊழலின் கோட்டை:

கொங்கு மண்டலம் ஊழலின் கோட்டை என்கிறார்கள். அதை நாங்கள் தகர்த்து காட்டுவோம். ஊழலை ஒழிக்க மக்கள் எங்களோடு கரம் கோர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஊழலற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்.
பணி நீக்கம்
தொடர்ந்து கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை நிகழ்த்தி வருகிறார்கள். அவற்றை எங்களுக்கு ஆதரவு தெரிவித்து பொய்யாக்கி காட்டுங்கள். எனது கட்சியில் எம்.எல்.ஏக்கள் சரியாக பணியை செய்யாவிட்டால் கட்சியில் இருந்து நீக்கி விடுவேன், இதில் எந்த சமரசமும் கிடையாது.
இதுவரையான, தொகுதி எம்.எல்.ஏக்களை நீங்கள் எளிதில் பார்த்திருக்க முடியாது. ஆனால், நாங்கள் வெற்றி பெற்றால் எங்கள் எம்.எல்.ஏக்களை நீங்கள் அடிக்கடி பார்க்க முடியும் இதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன்.
அரசியல் எங்கள் கடமை
எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் அரசியல் பயின்றவர்கள் அல்ல. ஆனால் அரசியல் என்னவென்பது எங்களுக்கு தெரியும் அதில் நாங்கள் 40 ஆண்டுகாலம் பயணித்துள்ளோம். அரசியல் எங்களுக்கு தொழில் அல்ல கடமை, எங்கள் கடமையை சிறப்பாக செய்வோம், இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.