கோவை: கமலஹாசனின் சொந்த வாழ்வில் அவரை நம்பி வந்த பெண்களை காப்பாற்றாதவர், மக்களை எப்படி காப்பாற்றுவார் என்று கோவை பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பேசிய நடிகர் ராதாரவி காட்டமாக விமர்சனம் செய்தார்.
கோவை: கமலஹாசனின் சொந்த வாழ்வில் அவரை நம்பி வந்த பெண்களை காப்பாற்றாதவர், மக்களை எப்படி காப்பாற்றுவார் என்று கோவை பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பேசிய நடிகர் ராதாரவி காட்டமாக விமர்சனம் செய்தார்.
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியதாவது:-
நான் இங்கு நடிகனாகத்தான் வந்திருக்கிறேன். இப்போது கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவதை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது எனது கடமைகளில் ஒன்று. இந்தத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நேர்மை அற்றவர். அவரது தனிப்பட்ட வாழ்விலேயே தன்னை நம்பி வந்த பெண்களைக் காப்பாற்றாமல் கைவிட்டவர், எப்படி மக்களைக் காப்பாற்றுவார்?
வானதி சீனிவாசனின் ஓட்டு வங்கியை பிரிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் `பி டீம்' ஆக கமல்ஹாசன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். கம்யூனிஸ்டுகள் 27 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தி.மு.க. கூட்டணியில் இருக்கின்றனர். அதேபோல் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
சுயமாக சிந்தித்து பேச முடியாமல் பேப்பரில் எழுதி வைத்து அதைப் பார்த்து படிப்பவர்தான் ஸ்டாலின். வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடையும். அதைத்தொடர்ந்து, 69 ஆண்டு காலமாக திராவிடத்தை சுவாசித்துக் கொண்டிருந்த நாங்கள் தற்போது தேசியத்தையும் சுவாசிக்க வெளியே வந்துள்ளோம்.
இஸ்லாமிய சமூகத்தினரின் நண்பனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் தி.மு.க. உண்மையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கையே கடைபிடித்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற சட்டங்கள் அவசியம் தேவை. அதன் மூலமாகத்தான் இந்தியாவில் இருக்கும் வேற்று நாட்டவரை கண்டறிய முடியும். இதைப்போன்ற பல அரிய சட்டங்களை மோடி தான் கொண்டு வந்தார். வரும் தேர்தலில் வானதி சீனிவாசன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கமல்ஹாசன் போன்றோரை மக்கள் ஆதரிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.