திருப்பூர்: பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்கலம் பகுதியில் திமுக வேட்பாளர் முத்து ரத்தினத்திற்கு ஆதரவு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர்: பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்கலம் பகுதியில் திமுக வேட்பாளர் முத்து ரத்தினத்திற்கு ஆதரவு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், இங்கு திரண்டுள்ள என் பாசத்திற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்கும் என் வணக்கம். விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் விண்ணுக்குச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2 மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை மட்டும் 225 ரூபாய் உயர்த்தியுள்ளார்கள். விலைவாசி இப்படி உயர்ந்து கொண்டே வருவதால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்றும் நேற்று அமெரிக்காவில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு அமைச்சர் லாயிஸ்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். தாத்திரியில் 104 டிகிரி காய்ச்சலில் படுத்திருந்த முகமது அத்தலாக் என்பவரை அவரது வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கூறி அடித்தே கொன்றார்கள். இதனைக் கண்டித்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரை சுட்டுக் கொன்றார்கள்.
எனவே, இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை இந்த மத்திய அரசு உருவாகியுள்ளது. இதற்கு தமிழகத்தில் எடுபிடி எடப்பாடி அரசு துணையாக உள்ளது. நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் அறிஞர் அண்ணாவின் தம்பி தந்தை பெரியாரின் பேரன் இந்த நாட்டில் நடக்கின்ற சம்பவங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது என்னுடைய கடமை.
இந்தியாவில் இஸ்லாமியர்களை வேற்றுமை படுத்தி குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்தார்கள் அதனை எல்லா மாநிலங்களும் எதிர்த்தபோது தமிழக அரசு எதிர்க்காமல் ஆதரித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பது எவ்வளவு வெட்கக்கேடான ஒன்று. இதனை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனவே, ஒரு வாக்கு கூட சிதறாமல் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும். தமிழகம் ஆபத்தில் உள்ளது எனவே மக்கள் சிந்தித்து திமுகவுக்கும், திமுக கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டும். பல்லடம் தொகுதியில் முத்துரத்தினம் உங்களை நம்பி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மறுமலர்ச்சி திராவிட கட்சியின் வேட்பாளர் முத்து ரத்தினத்திற்கு ஆதரவளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.