கோவை: மக்கள் நீதி மையம் சார்பில் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மற்றும் கட்சியின் துணை தலைவர், மகேந்திரனை ஆதரித்து பொதுக்கூட்டம் இன்று மாலை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடந்தது.
கோவை: மக்கள் நீதி மையம் சார்பில் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மற்றும் கட்சியின் துணை தலைவர், மகேந்திரனை ஆதரித்து பொதுக்கூட்டம் இன்று மாலை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடந்தது.
இதில், வேட்பாளர்களை அறிமுகப்படுத்திமக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் பேசியதாவது:
அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணி நல் உள்ளங்கள் கொண்ட பலர் ஒதுங்கி இருந்த சூழலில், அவர்களிடம் அசிங்கத்தை பார்க்காமல் அந்த சாக்கடையை தூர்வார வேண்டும், என்று கூறி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்களை அரசியலுக்குள் வர வைத்துள்ளேன்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் ஒருவர் வெற்றி பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். மத்திய அரசு மக்கள் விரோதமாக கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை எதிர்த்து பேச வாய்ப்பு கிடைத்திருக்கும். இருப்பினும், எதிர்வரும் தேர்தலில் வெற்றிகள் பலவற்றை குவிக்க தகுதியுடையவர்களாக இன்று எங்களில் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விவசாயிகள் கையில் மட்டுமே விவசாயம் இருக்கவேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் அல்ல.எங்கள் கட்சிக்கு, ஏன் வாக்களிக்க வேண்டும், என எண்ணுபவர்களுக்கு நான் கூறிக் கொள்வதெல்லாம் ஒன்று தான், நாங்கள் நேர்மையானவர்கள். நேர்மையை நம்பித்தான் நான் களத்தில் இறங்கியுள்ளேன். அதுவே என்னுடைய பட்டமாகும். என்றுமே மக்களின் குரலாக இருக்கவே எனக்கு விருப்பம்.
அண்டா, குண்டா வேண்டாம்.!
அண்டா, குண்டா உள்ளிட்ட பொருட்கள் மக்களுக்கு தேவையில்லை. நல்ல திட்டங்கள் மட்டும் தான் தேவை. தண்ணீரே சீராக வழங்கப்படாத போது வாஷிங் மிஷின் கொடுத்து என்ன பயன். தண்ணீர் வழங்கும் உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திடம் வழங்கப்படுவதும், அதற்கு மக்கள் கட்டணம் செலுத்தி பெறுவதற்கு ஒப்புதல் தெரிவிப்பது, என்பதெல்லாம் உங்களுடைய உரிமைகளை நீங்களே இழந்து விட்டீர்கள், என்பதை உணரவேண்டும்.
உங்கள் உரிமை
அனைத்து அத்தியாவசிய சேவைகளும் பெறுவது அனைவரின் உரிமையாகும். சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பினால் தான் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களின் செயல்பாடு குறித்து தெரிந்து கொள்ள முடியும். அதற்காகவே, வழக்கு தொடர்ந்து உள்ளோம்.
உங்களின் மீது இன்று செய்யப்படும் முதலீடு உங்களை நன்றாக அளந்த பின்னர் செய்யப்படுகிறது. அவர்கள் செய்யும் தவறுகளை நீங்கள் மறப்பதற்காகவே பணம் வழங்குகின்றனர்.
கட்சியினர் மீது ரெய்டுகள்
இன்று, வருமான வரித்துறை ரெய்டு மூலம் எனது கட்சிகாரர்களை கலங்கடிக்க பார்க்கின்றனர். இதுபோன்று திட்டமிட்டு வேண்டுமென்றே அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் செய்யப்படும் ரெய்டு எங்களை எவ்விதத்திலும் பாதிக்காது.
மக்களுக்காக சேவை என்பதே என்னுடைய நோக்கம்.
நான் ஒரு நாள் வேலை செய்தால் ஒரு கோடி ரூபாய் ஊதியம் பெற முடியும். 60 ஆண்டுகளாக என்னை ஆடம்பரமாக வாழவைத்த மக்களுக்கு, என்னுடைய கடைசி காலத்தில் சேவை செய்வதை நோக்கமாக கொண்டு நான் அரசியலில் களம் இறங்கியுள்ளேன்.
படிப்படியாக தான் மது கடைகளை மூட வேண்டும்
டாஸ்மாக் வருமானம் மட்டும் நம்பி அரசு இயந்திரம் இல்லை. தற்போது உள்ள கடைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்தாலும் அரசு இயந்திரத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும்.
பாதியாகக் குறைப்பது என்று நான் சொல்வதற்கு காரணம் இன்று மக்கள் பலரும் மது போதைக்கு அடிமையாகி விட்டனர், உடனடியாக, கடைகள் அனைத்தையும் மூடினால் சமூகத்தில் வேறு மாதிரியான பிரச்சனைகள் உருவாகும்.அதை தவிர்க்கவே படிப்படியாக மதுக்கடைகளை மூடுவது என்ற நடவடிக்கை முன் வைத்துள்ளேன்.
தவிர மது பழக்கத்திலிருந்து மீள்வதற்காக உளவியல் நிபுணர்கள் பலரை பணியமர்த்தி செயல்பட்டால் எதிர்வரும் காலத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நிச்சயம் நம்மால் மூட முடியும்.
இத்தனை சிறப்பு திட்டங்களை மக்களுக்காக வகுத்துள்ள எங்கள் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
தேர்தல் நாளன்று மற்றவர்கள் சொல்வதை கேட்காதீர்கள், உங்கள் மனது சொல்வதை கேளுங்கள். எந்த திட்டங்கள் சாத்தியமோ, அதை மட்டுமே எங்கள் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது . ஒரு ஊழல் கட்சிக்கு மாற்றாக இன்னொரு ஊழல் கட்சி இருந்துவிடக் கூடாது. இதை மக்கள் நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும். நடைபெற உள்ள இந்த தேர்தல் ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் சுதந்திரப்போர், இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.