கோவை: வரும் ஜூன் மாதத்தில் வர உள்ள நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பின் அமைச்சர் வேலுமணியின் அரசியல் முடிவுக்கு வரும் என தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.
கோவை: வரும் ஜூன் மாதத்தில் வர உள்ள நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பின் அமைச்சர் வேலுமணியின் அரசியல் முடிவுக்கு வரும் என தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவசேனாபதி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் பேரணியாக வந்த அவருக்கு பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொண்டாமுத்தூரில் அராஜகம் செய்யக்கூடிய, குண்டாஸ் காரியங்களை செய்யக்கூடிய ஒரே நபர் வேலுமணி மட்டுமே, எங்களிடம் குண்டாக்களும் கிடையாது, அவரிடமிருக்கும் பணமும் கிடையாது. எங்களிடம் உள்ளது மானமும் மரியாதை, மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் என்று தெரிவித்தார்.
இந்த தொகுதியில் மிகப்பெரிய எழுர்ச்சியை பார்க்கின்றேன், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள எழுச்சி தொண்டாமுத்தூரிலும் பார்க்க முடிகிறது. தொகுதி பிரச்சனைகள் குறித்து எங்களிடம் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று போளுவாம்பட்டி பகுதியில் இருந்து சுமார் 50 விவசாயிகள் வந்து சந்தித்தனர். அங்கு சட்டவிரோதமாக கிணறு வெட்ட அமைச்சர் வேலுமணி அனுமதி கொடுத்து, 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாயித்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்கிறோம் என பொய்யான அரசாணையைப் போட்டு அதை ஒரு தனியார் நிறுவனத்திற்கு எடுத்துச்சென்று அராஜகத்தைச் செய்து வருகிறார்.
இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர் அவை வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது. இப்படியே போனால் இந்த பகுதி பாலைவனமாக மாறிவிடும் என கூறினர். மேலும் இது குறித்து ஒரு காணொளியோ அல்லது பெயரையோ வெளிப்படுத்த அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு மாதத்தில் தேர்தல் முடிவு வரும் அப்போது தைரியமாகப் பேசுகிறோம் என தெரிவித்துள்ளனர்.
நான் வெளியூர் என கூறும் அமைச்சர் வேலுமணி எட்டிமடையில் இருந்து சுகுணாபுரம் வந்தவர் என தெரிவித்தார். பொது இடத்தில் எங்காவது ஒரு இடத்தில் அமைச்சர் என்னுடன் விவாதம் செய்ய வரச்சொல்லுங்கள். பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அவர் ஒரு 15 நிமிடம் நான் ஒரு 15 நிமிடம் விவாதம் செய்கிறோம். அதை வைத்து யார் சொல்வது உண்மை என்ற முடிவுக்கு வருவோம் என கூறினார்.
மேலும், விவாதத்திற்கு அழைத்தால் வரவில்லை. பதில் இல்லை, ஆனால் திமுக அராஜகம் செய்வதாக கூறுகிறார், 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை எதிர் கட்சியாக உள்ளோம், ஆனால் தற்போது மக்களோடு எழுச்சியைப் பார்த்து அவருக்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் பொய்யும், புரளியும் கூறி வருகிறார். நாங்கள் எதுவும் செய்ய போவதில்லை. ஜூன் மாதத்தில் உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வர உள்ளது. அந்த தீர்ப்புகள் அவரது அரசியல் முடிவுக்கு வந்துவிடும் என தெரிவித்தார்.
மேலும், ஆரம்பத்தில் வாக்காளர்களை நாங்கள் சந்தித்த போது காவலர்கள் சூழ்ந்து கொண்டு மக்களை வீடியோ எடுப்பதால் அவர்கள் பயந்து கொள்கிறார்கள், ஆனால் மாவட்ட எஸ்.பிக்கு தெரியாமல் காவலர்கள் வந்ததாக தெரிகிறது. இப்போது அந்த பிரச்சனை இல்லை என கூறினார்.