புதுடெல்லி; ஜவுளித்துறையில் நிலவும் நூல் தட்டுப்பாட்டை போக்க புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி; ஜவுளித்துறையில் நிலவும் நூல் தட்டுப்பாட்டை போக்க புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா கால ஊரடங்கின் போதும், ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னரும் ஜவுளித்துறையில் மூலப்பொருட்கள் தேவைக்கும் இருப்புக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டு விட்டது. இதனால் நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும் 30 சதவிகிதம் வரை அதிகரித்து விட்டது. எனவே, ஜவுளித்துறையில் இருப்போர், நூல் விலையை கட்டுப்படுத்தும் படி கோரிக்கை விடுத்தனர்.
நூல் ஏற்றுமதி குறைவாக இருக்கும் நிலையில் உள்ளூர் நூல் தேவையிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜவுளி மற்றும் துணிகள் தேசிய கமிட்டியானது ஜவுளித்துறையோடு தொடர்புடைய அனைத்துத் தரப்பினரோடும் கடந்த 12ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதன் அடிப்படையில் நூல் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலான இணையதளம் http://citiindia.org/yarn-form/form/form.php என்ற பெயரில் இந்திய ஜவுளித்தொழில் துறை கூட்டமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் நூல் தட்டுப்பாடு குறித்து 24 மணி நேரமும் தகவல்களைத் தெரிவிக்கலாம். பின்னர் இந்த தகவல்கள் சம்பந்தப்பட்ட ஜவுளி சங்கங்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சிலுக்கு தெரிவிக்கப்படும். நூல் தட்டுப்பாடு குறித்து அல்லது நூல் இருப்பு இல்லை என்பது குறித்து பதிவிடும்படி அறிவுறுத்தப்படும். அதற்கு ஏற்றபடி தீர்வு காணும்படி வலியுறுத்தப்படும்.
இது குறித்து பேசியுள்ள ஜவுளி மற்றும் ஆடைகள் தேசிய கமிட்டியின் ஒருங்கிணைப்பாளரும், இந்திய ஜவுளித்தொழில்துறை கூட்டமைப்பின் தலைவருமான டி.ராஜ்குமார்,
“இந்த முறையானது விற்பவர், வாங்குபவர் நேரடியாக தொடர்பு கொள்ளுவது போல செயல்படும். இது தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும். விரைவாக இந்த பிரச்னையில் தீர்வு காணவும் உதவும். இந்த இணையதள சேவையை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தி உறுதியான முறையில் தீர்வு காணவேண்டும். குறிப்பாக ஸ்பின்னிங் மில்கள் நூல்விலையைக் கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.