கோவை: தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாதிபதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியை எதிர்த்து போட்டிட உள்ளதால் அந்த தொகுதியில், திமுக மற்றும் அதிமுக என இரு கட்சியினரும் தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாதிபதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியை எதிர்த்து போட்டிட உள்ளதால் அந்த தொகுதியில், திமுக மற்றும் அதிமுக என இரு கட்சியினரும் தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாதிபதியுடன் திமுக நிர்வாகிகள் இன்று பேரூர் பட்டீஸ்வரர் அருகே ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதனிடையே, அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய அவ்வழியாக வரவிருந்ததால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக கட்சியினர் அவரை வரவேற்க பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன் ஏராளமானவர்கள் காத்திருந்தனர்.
இதனிடையே, அமைச்சர் அங்கு வருவதற்கு முன், கார்த்திகேய சிவசேனாதிபதி வெளியே காரில் சென்ற போது, அதிமுக தொண்டர்களும், திமுக தொண்டர்களும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, இரு கட்சி தொண்டர்களிடையே தள்ளு முள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.
திமுக பேரூர் கழகச் செயலாளர் ப.அண்ணாதுரை, தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் க.மோகன், கழக நிர்வாகிகள் நாராயணசாமி, முனியப்பன், ஞானவேல், சண்முகநாதன், காளிமுத்து, விஜய் பாலாஜி, சரவணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள், இதனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே, அமைச்சர் அருகில் வருவதாக தகவல் வந்ததை அடுத்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.