கோவை: மேற்கு மண்டலத்தில் 18 முக்கிய குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: மேற்கு மண்டலத்தில் 18 முக்கிய குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல ஐ.ஜி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “சட்டப்பேரவைத் தேர்தலை அமைதியாக நடத்தும் விதமாக கோவையில் ஒருவர், ஈரோட்டில் 6 பேர், திருப்பூரில் 2 பேர், சேலத்தில் 3 பேர், கிருஷ்ணகிரியில் 4 பேர் என 18 முக்கிய குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர கோவையில் 60 ரவுடிகளும், ஈரோட்டில் 103 பேர், திருப்பூரில் 61 பேர், நீலகிரியில் 50 பேர் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரியை சேர்ந்தோர் உட்பட 946 ரவுடிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேர் ஏபிஎஸ் வகை ரவுடிகளாவர்.
மேற்கு மண்டலத்தில் 13 கள்ளத் துப்பாக்கி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 பேர் கைது செய்யப்பட்டு 19 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு மண்டலத்தில் இதுவரை 6, 107 துப்பாக்கிகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து இதுவரை 468 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவையில் ரூ.15 லட்சம் ரொக்கம், ரூ.2.96 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் ரூ.2.72 கோடி ரொக்கம், ரூ.80.16 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் வாக்கு எண்ணிக்கையின் போது சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.