கோவை: கோவையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறினார்.
கோவை: கோவையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்றுகையெழுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. கலெக்டர் ராசாமணி கையெழுத்து போட்டு தொடக்கிவைத்தார். அப்போது `அனைவரும் வாக்களிப்போம் அனைவரும் மாஸ்க் அணிவோம்' என்ற வாசகம் அடங்கிய ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் ராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 43 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி 14-ஆம் தேதியும் இரண்டாம் கட்ட பயிற்சி 26-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆயிரத்து 650 பேர் உள்ளனர். விருப்பமுள்ளவர்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான கோவை மாநகரப் பகுதிகளில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 120 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்குரிய பண பரிவர்த்தனை தொடர்பான தகவல் அளிக்க வேண்டும் என அனைத்து வங்கிகள் தனியார் நிதிநிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.