Breaking: அரசியலில் இருந்து விலகுகிறேன் - சசிகலா
கோவை: சற்று நேரத்திற்கு முன்பு சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாகவும், இது குறித்து ஒரு விரிவான அறிக்கையை சசிகலா வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, செய்தியாளர்கள் மத்தியில் தினகரன் அந்த அறிக்கையை வாசித்தார். அதில், நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும்.
நம்முடைய பொது எதிரி தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய "திமுக"வை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் உருவமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா அவர்கள் உயிருடன் இருக்கும்போது எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைவிற்குப் பிறகு அப்படித்தான் இருக்கிறேன்.
நான் என்றும் பதவிக்கு, பட்டத்திற்கு, அதிகாரத்திற்கு ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவி இடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகலா கூறியிருந்ததை செய்தியாளர்கள் முன்னிலையில் தினகரன் வாசித்துக், பேட்டியளித்தார்.
அப்போது, செய்தியாளர்கள் ஏன் இந்த முடிவை சசிகலா எடுத்தார்? நீங்கள் அவர்களிடம் பேசினீர்களா என கேட்டதற்கு, "நான் எவ்வளவோ பேசிப் பார்த்தேன், சசிகலா அவர்கள் அதற்கு உடன்படவில்லை, முடிவை மாற்ற மறுத்து விட்டார்" என்று தினகரன் பதிலளித்தார்.
இந்த செய்தி தற்சமயம் தமிழகத்தில் அரசியல் சூழ்நிலையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

