யாருக்கு ஆதரவு அளிப்பது..? கோவையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கூட்டம்: பா.ஜ.கவுக்கு நூறு சதவீத எதிர்ப்பு - ஆளுர் ஷா நவாஸ்.
கோவை: வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது..? என்பது குறித்த கூட்டம், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில், கோவையில் இன்று நடைபெற்றது.
கோவையில் இன்று நடைபெற்ற
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம், அவ்வமைப்பின் தலைவர்
ஃபக்கீர் முஹமது அலதாஃபி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மக்கள் நலனில் சிறிதும் அக்கரையில்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், பெட்ரோல், டீசல் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அது குறித்து கேள்வி எழுப்பினால் ஆணவத்துடன் பதிலளிக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் போக்கு கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.
"பசு மாடு வைத்து அரசியல் செய்து, சிறுபான்மையினர் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மதவாத பாரதிய ஜனதா கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு கிடையாது என்றும், பாசிஸ சக்திகளை நூறு சதவீதம் எதிர்ப்பதாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு இல்லை", என்று குற்றம் சாட்டினார்.
மின்னனு ஓட்டு முறையை மாற்றி,
வாக்கு சீட்டு முறையையே கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பேசிய அவர், "வளர்ந்த நாடுகளிலேயே மின்னனு ஓட்டு முறையை பயன்படுத்துவதில்லை, நமது நாட்டில் மின்னனு ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துவது அதன் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும், அதனால் வாக்கு சீட்டு முறையையே கடைபிடிக்குமாறு தாங்கள் கேட்டுக் கொள்வதாக", அமைப்பின் சார்பில் கோரிக்கையை முன்வைத்தனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில், எந்த தொகுதியில் எந்த கட்சிக்கு வாக்காளிப்பது என்பது பற்றி, அரசியல் கட்சிகள் தங்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை பொறுத்து ஓரிரு தினங்களில் தெரிவிப்பதாக, தெரிவித்த அவர்,
இதுவரை, எந்த கட்சிக்கு ஆதரவு என்பது இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், பாஜக கட்சிக்கு எதிர்ப்பு என்பதில் மட்டும் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், தாங்கள் நேரடியாக அரசியலில் இல்லாத காரணத்தினால், சிறுபான்மையினரின் உரிமையை காக்கும் கட்சிக்கு தங்கள் ஆதரவு இருக்கும், என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.