திருப்பூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்து வண்டியில் ஏற்றி சென்ற கொள்ளையர்கள்; போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர்: திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை அந்த வங்கியின் ஏடிஎம் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அந்த வங்கியின் ஏடிஎம் மையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
உடனடியாக, கொள்ளை நடைபெற்ற இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, விசாரணையை தொடங்கிய போலீஸார், கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தை பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் விட்டுவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை மாற்று வண்டியில் எடுத்துச் சென்று உள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை சம்பவத்தை குறித்து வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கையில், கடந்த 19ஆம் தேதி இயந்திரத்தில் 15 லட்சம் ரூபாய் வைத்ததாகவும், நேற்றைய தினம் குறைந்த பட்சமாக ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே இருந்திருக்கலாம், என தெரிவித்தனர்.
மேலும், வங்கி கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்த போது 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து நான்கு சக்கர வாகனத்தில் கயிற்றைக் கட்டி ஏடிஎம் எந்திரத்தை வாசல் வரை கொண்டு வந்து பின்பு வாகனத்தில் ஏற்றி சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதில், ஏடிஎம் இயந்திரத்தின் கதவுகள் மற்றும் வாசல் ஆகியவை சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.