கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாதிரி சாலையை திறந்து வைத்த அமைச்சர் வேலுமணி பீனிக்ஸ் பறவை சிலை முன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாதிரி சாலையை திறந்து வைத்த அமைச்சர் வேலுமணி பீனிக்ஸ் பறவை சிலை முன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
கோவை ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மாதிரி சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்து பீனிக்ஸ் பறவை சிலை முன்பாக செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
திறப்பு விழாவில் அ.தி.மு.க. வைச்சேர்ந்த கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:-
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான மாதிரி சாலைகளை பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் கட்டி முடித்திருக்கிறோம். மின்சார இணைப்பு, குடிநீர் குழாய்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப ரீதியான வசதிகள், மல்டிலெவல் பார்க்கிங் வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து வந்த இடையூறுகளைத் தாண்டி இப்பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளோம்.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சாலைகள் மேம்படுத்தப்பட்டு விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிக பாலங்கள் உள்ள மாவட்டம் கோவை தான் என்றும், கோவை அவினாசி சாலையில் மட்டும் 10 கிலோமீட்டருக்கு பாலம் கட்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதேபோல் கோவையில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டிருக்கும் மாதிரி சாலைகள் விரைவில் திறக்கப்படும். உக்கடம் பகுதியில் வரும் 27-ஆம் தேதி ஸ்மார்ட் சாலை திறக்கப்பட இருக்கிறது. அந்த விழாவில் கலந்துகொள்ள இந்த மேடையிலேயே அழைப்பு விடுக்கிறேன். ஸ்மார்ட் சிட்டியைத் தொடர்ந்து பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கோவைக்கு கொண்டுவரவிருக்கிறோம். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருக வாய்ப்புகள் உள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் பல ஆண்டு காலமாக நீடித்து வந்த அவிநாசி அத்திக்கடவு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது. மக்களோடு மக்களாக இருக்கும் எளிய முதல்வர் பழனிச்சாமி, விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால்வைக்க முடியும் என்பதை அறிந்து விவசாய பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.
தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் கோவைக்கு 6000 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் அண்மையில் கோவை அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 25 கோடி மதிப்பிலான புற்றுநோய் சிகிச்சை கருவிகளை வாங்கி கொடுத்துள்ளோம். அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செய்ய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நொய்யல் ஆற்றை இப்போது சீரமைக்கப்போகிறோம். இப்போது ஆற்றை சீரமைக்கும் பணி துவங்கிவிட்டது. கோவை ரேஸ்கோர்ஸ், காந்தி பார்க் பகுதிகள் மேம்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.
சூயஸ் குடிநீர் வழங்கும் திட்டத்தில் தண்ணீர் அடமானம் வைத்ததாகவும், விற்றதாகவும் ஒரு சிலர் பேசி வருகின்றனர். நாங்கள் மக்களை ஏமாற்ற மாட்டோம். தண்ணீர் டிஸ்ட்ரிபூஷன் மட்டுமே கொடுத்துள்ளோம். கோவை மாநகரில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படவுள்ளது. அதேபோல் உயிரியல் பூங்காவையும் மேம்படுத்தப்போகிறோம். 50 ஆண்டு காலத்தில் தமிழகம் காணாத வளர்ச்சியை ஐந்தாண்டு காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.