கோவை: நாளை ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படவிருக்கும் சூழலில்,`அம்மா... எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்' என்று கோவை அங்கன்வாடி பணியாளர்கள் தீபம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: நாளை ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படவிருக்கும் சூழலில்,`அம்மா... எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்' என்றுகோவை அங்கன்வாடி பணியாளர்கள் தீபம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமையலர், அங்கன்வாடி பணியாளர், மேற்பார்வையாளர் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாகவும், ஊதிய உயர்வு கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நாளை ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் அம்மாவுக்கு விளக்கேற்றி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தும்படி கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூடிய அங்கன்வாடி பணியாளர்கள் கைகளில் விளக்குகளைக் கொண்டு வந்திருந்தனர்.
திடீரென அனைவரும் தீப்பெட்டியை எடுத்து விளக்கேற்றி கைகளில் பிடித்தபடி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அவர்கள், `ஜெயலலிதா அம்மா அவர்களே நீங்கள் இருந்திருந்தால் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி இருப்பீர்கள். நாளை உங்களுடைய பிறந்தநாள். ஆதலால் எங்கள் கோரிக்கையை நாங்கள் உங்கள் முன் வைக்கிறோம். நீங்களே எங்கள் கோரிக்கையை பிறந்தநாளன்று நிறைவேற்றித் தாருங்கள்' என கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நூதனமான வித்தியாசமான அணுகுமுறை கொண்ட போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்குள் மொத்தமாக ஒளி தெரிவதை அந்தவழியாகச் சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.