கோவை: கோவையில் வரும் 21ம் தேதி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெற உள்ள நிலையில், 1000 காளைகள் மற்றும் 900 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை: கோவையில் வரும் 21ம் தேதி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெற உள்ள நிலையில், 1000 காளைகள் மற்றும் 900 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் 4வது ஆண்டாக வரும் பிப்ரவரி 21ம் தேதி செட்டிபாளையம் அடுத்த நீலம்பூர் புறவழிச் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கால்கோள் நடும் விழா இன்று நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கால்கோளை நட்டுவைத்து பணிகளை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் வரும் 21ம் தேதி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டி கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி நடைபெற உள்ளது எனவும் ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்த பெருமை இந்த அரசுக்கு உள்ளது என்றார்.
நான்காவது முறையாக கோவையில் மாவட்ட நிர்வாகம், ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்துவதாக தெரிவித்த அவர், கடந்த 2018ம் ஆண்டு 445 காளைகளும், 323 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். 2019ல் 746காளைகள் 599 மாடுபிடி வீரர்களும், 2020ல் 940 காளைகளும், 645 வீரர்களும் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், இந்த போட்டியில் பங்கேற்கும் காளைகளும், வீரர்களும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது எனவும் வெற்றி பெறுவோர்க்கு மாருதி கார், காளைகளுக்கு தங்க நாணயம், சைக்கிள் பீரோ, ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்த ஆண்டு 1000 காளைகள், 900 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், 5 லட்சம் மக்கள் இதனை பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
அதேபோல, காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடைத் துறை சார்பில் 18 குழுக்களும், பொது சுகாதாரத்துறை சார்பில் 12 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன எனவும் வீரர்கள் முழுமையான பரிசோதனைக்குப் பின் தகுதி அடிப்படையில் கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பார்வையாளர்கள் கூடத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க மேற்கூரை அமைக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், விளையாட்டு நடைபெறும் இடம் முழுவதும் சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்கப்படும் என்றார். உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் எனவும், விவசாயிகளின் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த முதலமைச்சருக்கு கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறினார்.