கோவை: பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இளைஞர்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக, கோவையில் வரும் 8ம் தேதி மாபெரும் உண்ணாவிரதம் நடத்த உள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இளைஞர்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக, கோவையில் வரும் 8ம் தேதி மாபெரும் உண்ணாவிரதம் நடத்த உள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 143 சமுதாய மக்களை ஒன்றிணைத்துப் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் முதல் மாநாடு அன்மையில் கோவையில் நடைபெற்றது.
இதில், முன்னாள் காவல் துறையினர், முன்னாள் அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உட்பட பிற்படுத்தப்பட்டோர் சமுதாய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் இளைஞர்களின் நலன் கருதியும், வருங்கால சந்ததிகளின் உரிமையை பாதுகாக்கும் விதமாகவும் கோவையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க இக்கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவர்களது தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் காவல்துறை அதிகாரியும், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ரத்தினசபாபதி பேசியதாவது:
பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் அனைவரின் நலன் கருதியும்,உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாகவும்,பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் நேர்மையான முறையில் கணக்கெடுத்து வாய்ப்பு வழங்க வேண்டும். இது போன்ற இழந்த உரிமைகளை மீட்கும் விதமாக, வரும் 8 ஆம் தேதி கோவை, பவர் ஹவுஸ் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. இதில் கோவை,திருப்பூர் பகுதிகளில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, பிற்படுத்தப்பட்டோர் அனைத்து சமூக அமைப்பைச் சேர்ந்த வெள்ளியங்கிரி, வேலுசாமி, இருகூர் அசோக், சூலூர் சந்திரசேகர் மாரியப்பன், டாக்டர் சிவகுமார், சூலூர் கண்ணன், ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.