கோவையில் கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்று அலட்சியம் கூடாது - ஆட்சியர் ராஜாமணி அறிவுரை.
கோவை: கோவை: கொரோனோ வைரஸ் குறித்து மக்களிடையே படிப்படியாக விழிப்புணர்வு குறைந்து வருகிறது. அதனால், கோவை மாவட்ட மக்கள் அலட்சியமாக இருக்காமல் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை கையாள வேண்டும், என மாவட்ட கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவையில் புதிய மரபணு மாறிய கொரோனா பாதிப்பு என்பது பதிவாகவில்லை. வெளிநாடுகளில் இருந்து, 143 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அவருக்கு மரபணு மாறிய கொரோனா தொற்று இல்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. அவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்.
கோவையில் நாள் ஒன்றுக்கு, 50 என்ற அளவில் கொரோனா பாதிப்பு தொடர்கிறது. மாநகராட்சி பகுதியில் பாதிப்பு ஏற்படும் இடங்களை, கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தற்போது, தொற்று குறைந்து இருப்பினும், மக்கள் அலட்சியம் தவிர்த்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். முககவசம், சமூக இடைவெளியை எப்போதும் கடைபிடிக்க வேண்டும், இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.