கோவையில் கிடப்பில் போடப்பட்ட ஹோப் காலேஜ் உயர்மட்ட மேம்பால பணிகள்; நாளை திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கோவை: திமுக ஆட்சியில் துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஹோப் காலேஜ் உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று எம்எல்ஏ நா கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏவுமான நா.கார்த்திக் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்: கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 37 வது வார்டில் தண்ணீர்பந்தல் ரோட்டில் ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக, கடந்த 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், ரூ 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்தும் 2 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது.
இதனால், அவ்வழியாக செல்லக்கூடிய ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே,தமிழக அரசு உடனடியாக இந்த மேம்பாலப் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை, ஜனவரி 28 ஆம் தேதி மாலை 4 மணிக்கு,தண்ணீர்பந்தல் தொழில்நுட்பப் பூங்கா அருகே திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது உடன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து,முரா.செல்வராஜ், கோட்டை அப்பாஸ், ஆனந்தன் ஆகியோர் இருந்தனர்.