நீலகிரி: நீலகிரியில் லாரி உரிமையாளரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும் களவுமாக சிக்கினார்.
நீலகிரி: நீலகிரியில் லாரி உரிமையாளரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும் களவுமாக சிக்கினார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தவேல். இவர் கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு ஒரு லோடு எம்.சாண்ட் கொண்டு வர 20 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் என்று பேரம் பேசியுள்ளார். தொடர்ந்து இவர் இந்தச் செயலில் ஈடுபட்டதால் வேறு வழியில்லாமல் லாரி உரிமையாளர்கள் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பிரின்ஸ் எலியாஸ் என்பவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். அந்தப் பணத்துடன் பிரின்ஸ் எலியாஸ் இன்ஸ்பெக்டரிடம் போய் பேசியுள்ளார். அவருடன் பேரம் பேசியபோது 10 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் போதும் என்று இன்ஸ்பெக்டர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பிரின்ஸ் எலியாஸ் அந்தப் பணத்தை இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலின் கையில் கொடுத்தவுடன் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் கையும் களவுமாக அவரைப் பிடித்து கைது செய்தனர்.