கோவை: சமூக விதிகளைப் பின்பற்றி கோவையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மகிழ்ச்சியில் திளைப்பதாகக் கூறினர்.
கோவை: சமூக விதிகளைப் பின்பற்றி கோவையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மகிழ்ச்சியில் திளைப்பதாகக் கூறினர்.
கோவையில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு காலை 7.30 மணியில் இருந்தே மாணவிகளும், ஆசிரியர்களும் வரத்தொடங்கினர். மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என 653 பள்ளிகள் திறக்கப்பட்டன. 86 ஆயிரம் மாணவ-மாணவிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல் தெரிவித்தார். மேலும் 25 பறக்கும்படை அமைப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளின் செயல்பாடு மற்றும் மாணவர்களைக் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின.
வெரைட்டி ஹால் சாலையில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பிரசன்டேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு காலை 8 மணியிலிருந்து ஆசிரியர்களும் மாணவிகளும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். பள்ளியில் சமூக இடைவெளியைப் பின்பற்றும்விதமாக ஒரு மீட்டர் இடைவெளி விட்டு கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டங்கள் வாயிலாக சமூக விதிகளைப் பின்பற்றி மாணவிகள் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சானிடைசர், முக கவசம் அணிவது குறித்து ஆசிரியர்கள் உறுதி செய்த பின்பே மாணவிகளும், ஆசிரியர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் வகுப்புக்கு 25 பேர் வீதம் 30-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் மாணவிகள் அமரவைக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வகுப்புகள் எடுப்பதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பாடம் கற்க ஆவலுடன் இருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.